No results found

    செல்லப்பிராணியை ஏன் வெச்சுக்கணும் தெரியுமா!!!


    இந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப் பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப்பிராணிகள் என்றால் பிடிக்கும். அதிலும் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகிழ்வார்கள். மேலும் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளிதில் அது பழகும், நாம் எவ்வாறு அதனுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராகவே மாறிவிடும். என்ன தான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங்கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலளவிலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த செல்லப்பிராணியை எப்படி, எதற்காக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    * அலுவலகத்தில் உள்ள அதிக வேலையின் காரணமாக, மனஅழுத்தத்துடன் வீட்டிற்கு வருவோம். அப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை பார்க்கும் போது, ஆசையோடு தாவிக்குதித்து நம்முடன் விளையாடும். அந்த நேரத்தில் நம்மிடம் விளையாடுவதைப் பார்க்கும் போது, மனஅழுத்தம் குறைந்து, சற்று நிம்மதியாக இருக்கும். இந்த கட்டத்தில் நம்மை சமாதானப்படுத்துவதில், நம் செல்லப்பிராணியை தவிர யாராலும் நமது மனஅழுத்தத்தை குறைக்க முடியாது. ஆகவே அத்தகைய நம் செல்லப்பிராணியை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அதன் மேல் இருக்கும் கிருமிகள் நம்மைத் தாக்கி உடலில் நோயை ஏற்படுத்தும்.

    * காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் போது, நம்முடன் அந்த செல்லப்பிராணிகளையும் அழைத்துக் செல்லலாம். செல்லப்பிராணிகளுடன் விளையாட நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றன. மேலும் நீங்கள் சோம்பேறியாக இருப்பவராக இருந்தால், நமது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியை அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் அதை நாம் வெளியில் அழைத்துச் செல்கிறோம் என்றால் மிகுந்த ஆசையோடு, அங்கம் இங்கும் ஓடி நம்முடன் விளையாடும். மேலும் இதுவே ஒரு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.

    * வீட்டில் செல்லப்பிராணிகள் வாங்குகிறோம் என்றால், அதனை நமது நண்பனாகத் தான் நினைப்போம். மேலும் அவை நமக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் விளைவிக்காது. என்ன தான் பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், யார் உங்களை விட்டுச் சென்றாலும், நாம் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை விட்டுச் செல்லாது. இவற்றில் நாய்கள் தான் மிகவும் சிறந்தது.

    * எத்தனை பேர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நீங்கள் சொல்வதை கேட்கிறார்கள்? யாரும் இல்லையா? கவலைப்பட வேண்டாம். எந்த நேரத்திலும் நீங்கள் சொல்வதை மற்றும் நீங்கள் செய்வதை திரும்பி செய்யும் ஒரு உயிர், செல்லப்பிராணிகள் தான். அந்த நேரத்தில் உங்களுக்கு செல்லப்பிராணியை விட சிறந்த நண்பர் யாராகவும் இருக்க முடியாது. மேலும் என்ன கஷ்டம் என்றாலும், எந்த இரகசியம் என்றாலும் அதனை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால், அதை நமது செல்லப்பிராணிகளிடம் சொல்லலாம். சொல்லப்போனால், இந்த உலகில் யாரை நம்புகிறோமோ, இல்லையோ, நமது செல்லப்பிராணிகளை நம்பலாம்.

    * செல்லப்பிராணிகள் வீட்டில் இருந்தால், நமக்கு வீட்டில் ஒரு பாதுகாப்பு இருப்பது போல் இருக்கும். செல்லப்பிராணிகள் நமக்கு ஒரு சிறந்த நண்பன் என்று சொல்வதோடு, நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பையும் தரும். அது நம்முடன் இருக்கும் போது, கெட்ட எண்ணத்துடன் பழகும் எவரையும் விரைவில் காட்டிக் கொடுத்துவிடும்.

    Previous Next

    نموذج الاتصال