நம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அவை காயமடைந்து துரித சிகிச்சைகூட பலனளிக்காமல் பரிதாபமாய் மரணமடைந்தும் வருகின்றன. அந்த சந்தர்ப்பங்களில் அவைகளுக்கு சிகிச்சை அளிக்க இரத்த சேமிப்பு நிலையம் அவசியமாகிறது.
அந்த வகையில், ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர். பி. தங்கராஜு இதுகுறித்து குறிப்பிடுகையில் இந்தியாவெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நாய்களில் 10 சதவீதம் விபத்துக்களால் காயமடைந்தே வருகின்றன.
மேலும் விபத்துகள் அல்லாது அவைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கும் சந்தர்ப்பங்களின் போதும் இரத்த சேமிப்பு நிலையம் அவசியமாகிறது.
இந்த இரத்த சேமிப்பு நிலையத்தில் முதன் முதலாக ‘பிளாக் லெப்ரடார்‘ என்ற வகையைச் சேர்ந்த நாய் பதிவாகியுள்ளது. ஒரு வயது முதல் 8 வயது வரையிலான சுமார் 20 கிலோ எடையுள்ள நாய்கள், சுமார் 300 மில்லி இரத்தம் என்று வருடத்திற்கு நான்கு முறை இங்கு இரத்ததானம் செய்யலாம். இதுவரை இங்கு 28 நாய்கள் இந்த சேவையில் பதிவாகியுள்ளது என்றார்.